
நம் குழந்தையை நீ முத்தமிடும் போதெல்லாம்
நீ எனக்கு தந்த முத்தத்தின் நீட்சிதானோ இதுவென
நினைக்காமலிருக்க முடியவில்லை.
***********************************************
நம் அலுவலகத்திற்கு தற்செயல் விடுப்பு எடுத்துக்
கொண்டு அந்தக் கடற்கரையில் கால்கள் நனைத்து
திரிந்தோமே அந்த மணற்துகள்கள் இன்னமும்
உதிராமல் ஒட்டிக்கொண்டிருக்கின்றன மனசுக்குள்.
***********************************************
நம் திருமணத்தன்று உன் நெற்றிக்குத் திலகமிடும்
போது என் விரல்கள் நடுங்கியதற்கு சுற்றமும்
நட்பும் நகைக்க உனக்கு மட்டும் புரிந்ததுதானே
அது நம் காதலின் அதிர்வென.
***********************************************
என் காதலுக்குச் சம்மதம் சொன்ன அன்று நீ
உடுத்தியிருந்த புடவையில் நம் குழந்தைக்குத்
தொட்டில் கட்டிய போது எனக்குத் தோன்றியது
அது நம் காதலின் வெற்றிக் கொடியென.
***********************************************
அன்று நம் காதலுக்காகவே இளையராஜா மிக
இனிமையான பாடல்களைத் தந்தார் என்று
சொன்னால் இளையரஜா ரசிகர்கள் மிகவும்தான்
கோபித்துக் கொள்கிறார்கள். அவர்களை
மன்னித்து விடு சகி.
***********************************************